சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும், உடல் நிலை பாதிக்கும்
என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், சிகரெட்டினால் ஏற்படும்
பிரச்சினைகள் பல. அவற்றில் தற்போது தெரிய வந்துள்ள தகவல்
என்னவென்றால், தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்களுக்கு புத்தி
மழுங்குகிறது என்பதுதான்.
அதாவது, புத்திக் கூர்மை குறையும் என்று இஸ்ரேலில் உள்ள டெல்
அவிவ் பல்கலைக்கழகத்தின் மார்க் வெய்ஸர் தலைமையிலான
குழுவினர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சிகரெட் பிடிப்பவர்களுக்கும், அவர்களின் புத்தி கூர்மைக்கும்
உள்ள தொடர்பு குறித்து இந்த குழுவினர் ஒரு ஆய்வினை
மேற்கொண்டனர். இஸ்ரேல் ராணுவத்தில் உள்ள 18 முதல் 21
வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த
ஆய்வில், சிகரெட் பிடிப்பவர்களைக் காட்டிலும், சிகரெட்
பிடிக்காத ஊழியர்கள் புத்திக் கூர்மையுடன் இருப்பது ஆய்வில்
தெரிய வந்தது.
புகை பிடிக்காதவர்களின் சராசரி புத்திக் கூர்மை புள்ளி 101 ஆக
உள்ள நிலையில், புகை பிடிப்பவர்களின் புத்திக் கூர்மை 94 ஆக
உள்ளது. இவர்களுக்குள் சுமார் 7 புள்ளிகள் வித்தியாசம்
காணப்படுகிறது.
மேலும், ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு மேல் சிகரெட்டி ஊதித்
தள்ளுபவர்களுக்கு புத்திக் கூர்மையின் அளவு 90 புள்ளிகளாக
உள்ளது. ஆரோக்கியமான மற்றும் சரியான மனநிலையில்
உள்ளவர்களின் புத்திக் கூர்மை 84 முதல் 116 புள்ளிகள் வரை
காணப்படுகின்றன.
தற்போது மாறி வரும் இளைய சமுதாயம், நாகரீகம் எனக் கருதி தீய
வழிகளில் சென்று விடுகிறது. மற்றவர்களைப் பார்த்தும்,
நண்பர்களுடனும் சேர்ந்து புகைப்பிடிப்பது என்பது அதிகரித்து
வருகிறது. மிக இளம் வயதிலேயே புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு
ஆளாவதால் அவர்களது உடல்நிலை வெகு விரைவில் கெடுகிறது. இதனால்
சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் ஏராளமான பிரச்சினைகளை
ஏற்படுத்துகிறது.
எனவே, சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற
பழமொழியை நினைவில் கொண்டு, நமது உடல் ஆரோக்கியமாக
இருந்தால்தான் சாதனைகள் புரிந்து வரலாற்றில் இடம்பெற முடியும்.
இல்லையேல் நோயாளிகள் பட்டியலில் மட்டுமே இடம் கிடைக்கும்
என்பதை நினைவில் வைக்கவும்.
0 comments:
Post a Comment